Sunday, March 31, 2013

சிறகின் சொல்லைக் கேளாயோ !!


பறவையாய் சில நாட்கள் வாழ்ந்துதான் பார்ப்போமே
இயற்கையோடு இணைந்துவாழும் மகத்துவத்தை உணர்வோமே

இலைகளுடன் பினைந்தே இனிமையாய் இருப்போமே
பூக்களுடன் சேர்ந்து வண்ணங்கள் வரைவோமே

விடியலுக்குமுன் விழிக்கும் விழிகளைப் பெறுவோமே
வார்த்தையில்லா மொழியினிலே பாடல்கள் இசைப்போமே

வற்றாத நதியினிலே உல்லாசமாய் குளிப்போமே
செருக்கில்லா அமைதியின் ஆனந்தத்தில் இழைவோமே

கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மீண்டும் செல்வோமே
சுற்றம் சூழ ஒற்றுமையாய் நட்பு பாராட்டுவோமே

நம் வீட்டை நமக்காக நாமே உருவாக்குவோமே
நம் இரையை நாமேத்தேடி பசியாற்றிக்கொள்வோமே

வாகனங்கள் தேவையில்லை இடம்மாறிச் செல்வோமே
ஆபரணங்கள் வேண்டியதில்லை ஆசைதான் துறப்போமே

சின்னக்கொஞ்சல் பாஷைகளில் மனிதருடன் பேசுவோமே
நம் சிங்கார அசைவுகளில் பிறர் மனதைப் பறிப்போமே

சுதந்திரமாய் வாழ்வதிலே உள்ள சுந்தரங்கள் அறிவோமே
தன்னம்பிக்கையாய் வாழ பாடங்கள் பயில்வோமே

சிறிதுணவு கிடைத்தாலும் பகிர்ந்துண்டு மகிழ்வோமே
பிற குடும்ப வாரிசையும் நாம் பேணி வளர்ப்போமே

பூஞ்சிட்டுப் பறவையாய் மலர்த்தேனை ருசிப்போமே
வாய்வழியே சிசுக்கூட்டும் அன்பினிலே திளைப்போமே

மேகத்தின் நடுவினிலே இன்பமாய் பறப்போமே
மேலுலகின் ரகசியத்தை அறிந்துதான் வருவோமே

மழைக்கால மென்சாரலில் சிறகடித்துச் சிலிர்ப்போமே
வானிலிருந்து புவியழகை அங்கங்காய் ரசிப்போமே

மரக்கிளையின் ஊஞ்சலிலே உல்லாசமாய் ஆடுவோமே
சாது விலங்கினங்கள், மரக்கிளைகள் நம் விளையாட்டுக்கூடமே

நமக்கிடையில் பகையில்லையே பரவசமாய் வாழ்வோமே
மதமில்லை, ஜாதியில்லை என பறைசாற்றிச் சொல்வோமே

ஆம்..
வாருங்கள்..
பறவையாய் சில காலம் வாழ்ந்துதான் பார்ப்போமே
பகையில்லா உலகத்திலே இறைவனையே காண்போமே



No comments:

Post a Comment